Skip to main content

ஆறு தெரியுமா தேவதேவ




எதிர்க்கரைப் புதர்களும் வாழை மரங்களும்

தெரியாமல் செந்நீர்க் காடாகும்

கருப்பந்துறை தாண்டி மேலப்பாளையம் போகும் பாலம் மூழ்கி

மண்டபங்களும்

படித்துறைகளும் மறையும்

எலும்பு துருத்திய வயோதிக நடை தொலைத்து

பேரோலம்

ஹோவென்று தூரத்தலிருந்தே ரீங்கரிக்கத் தொடங்கும்

காலை பூஜை நீங்கலாக இரவு வரை

நடுப்பகலில் தனிமையில்

இலக்கற்றுக் காத்திருக்கும்

குறுக்குத்துறை முருகனையும்

வெள்ளம் மூழ்கடிக்கும்

வட்டப்பாறை லிங்கங்களும்

ஆலமரத்தடி இசக்கியும்

சுடலை மாடனும் உடன் மூழ்கிப்போவார்கள்

கம்பி போட்ட அழிக்கதவுகள் திறந்த கண்களைப் போல

எதையும் மூடுவதற்கில்லையென்று மௌனித்து

நீருக்குள் ஆடிக்கொண்டிருக்கும்

காண்டாமணியின் நாக்கு ஒலிக்காமல் அசையும்

தைப்பூச மண்டபத்தின் மேல்

ஒற்றையாக

குட்டிகளுடனோ

வெள்ளாடு சிக்கிக்கொள்ளும்.

அடைக்கலத்திற்காக அவை ஏறிநிற்கும்

புராதனக் காரைக்கூரையின் மையம்

நீரில் மூழ்கியதை

இதுவரை நான் பார்த்ததில்லை.

Comments