Skip to main content

ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு - பிரமிள்




(2000க்குப் பின்னர் உள்ளடக்க ரீதியாகவும், வெளிப்பாட்டிலும் எத்தனையோ மாற்றங்களை அடைந்துவிட்டது  தமிழ் நவீன கவிதை. ஆனாலும் வானம்பாடிகளின் நிழல்கள் பல்வேறு மாறுவேடங்களுடன் கவிதைகளுக்குள், கலைக்குத் தொடர்பற்ற அதிகார, புகழ் வேட்கைகளுடன் திரியவே செய்கின்றன. பிறக்கும்போதே  காலாவதியாகிப் போன வானம்பாடிகளின் ஆவிகளும், நவீன கவிதை போலப் போலி செய்யும்   மலட்டு வெளிப்பாடுகளும் இன்றும் ஆங்காங்கே நின்று பிரசார இளிப்பு காட்டவே செய்கின்றன.   அவ்வகையில் வானம்பாடிக் கும்பலின் மேல் சொடுக்கிய பிரமிளின் விமர்சனக் கவிதை எப்போதைக்கும் பொருத்தமானது. அரசியலுக்குத் தலையும் கலைக்கு வாலும் காட்டுபவர்களுக்கு இக்கவிதை என்றும்) 

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

ஏழைக்கும் அடிமனத்தில்
ஆன்ம உணர்வுண்டு.
சடலத்துப் பசிதான்
சாசுவத மென்றால்
நடைபாதை தோறும்
சிசுக்கள் கறியாகும்.
இதற்கும் கீழே
இன்றைய வாழ்வின்
கோணல்களைக்
காணத் தெளிவற்றுப்
பாட்டாளிக் கவிதையென்று
அரசியலுக்குத் தலையும்
கலைக்கு வாலும்
காட்டுகிறீர்!
உயிரைக் கணந்தோறும்
கையில் பிடித்தபடி
வாழத் தவிக்கும்
ஏழைக்கு உங்கள்
ரொமாண்டிக் புஷ்பங்களும்
அக்கினிப் போலிகளும்
என்ன எழவென்றே
புரியாது.
யாருக்காய் எழுதுகிறீர்?
வயிற்றுக்கு உங்கள்
பாட்டாளிக் கவிதை
உணவல்ல.
சோறு முளைக்கப் 
பயிரிடு போ!
இன்றேல் ரசனைக்கு,
மனசின் பசிக்கு
உண்மைக் கவிதைப்
பயிர் காட்டு!


Comments