Skip to main content

அசீஸ் நந்தி



 தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
ரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது.


உங்கள் பெற்றோர்கள் பற்றி? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? உங்களது கலாசாரப் பின்னணி என்னவாக இருந்தது?

கல்கத்தாவில் தலைமுறைகளாக வாழ்ந்த வங்காள பாபுக்கள் நாங்கள். கிறிஸ்தவர்களாக மாறிய மூன்றாம் தலைமுறை எங்களுடையது. எனது பெற்றோர்கள் ஆச்சார(devout) கிறிஸ்தவர்கள். இங்கே வாழ்ந்த மற்ற மக்களைப் போலவே அவர்களது வாழ்க்கை முறையில் பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கங்கள் இருந்தது. உதாரணத்திற்கு இந்து அம்சங்களும் மெலிதான இஸ்லாமிய நடைமுறைகளும் எனது குடும்பத்தில் பிரதிபலித்தன. விரதம் மற்றும் பிற சடங்குகளை நாங்கள் இந்துமதத்திலிருந்து கடன்வாங்கி பின்பற்றினோம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களிலிருந்து சில விலக்குகளும் கடைபிடிக்கப்பட்டன. எங்கள் குடும்பத்தில் யாரும் மாட்டு இறைச்சியோ, பன்றி இறைச்சியோ சாப்பிடாததற்கு இது காரணமாக இருக்கக்கூடும். ஒரு வங்காள கிறிஸ்தவ குடும்பம் இரண்டையும் சாப்பிட முடியாததற்கு காரணம் எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அதுதான் நடைமுறையில் இருந்தது. அவர்களிடம் அதற்கான காரணமும் இல்லை. அவர்களது ஆட்சேபத்துக்குக் காரணம் என்னவென்று நான் கேட்டபோது," குறிப்பாக ஒன்றும் இல்லை, எங்களுக்குப் பிடிக்காது. அவை பெரிய மிருகங்கள்" என்று கூறினார்கள். அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது. ஏனெனில் எனது அப்பாவுக்கு பெரிய துண்டுகளாக இறைச்சி பரிமாறப்படும் போதெல்லாம் அவர் ஏதாவது காரணத்தைக் கூறி சாப்பிட மறுத்துவிடுவார். இந்தியாவின் தேசிய உணவுப்பொருளாக மாறிவிட்ட தந்தூரி சிக்கனை அவர் சாப்பிடுவார் என்று என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. உயிருடன் இருக்கும் விலங்கை ஞாபகப்படுத்தும் உணவை அவர் சாப்பிட விரும்பாதவராக இருந்தார். ஒருமுறை எனது அப்பா டெல்லிக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்கப் போயிருந்தார். அங்கே அவரது அலுவலக சகாக்கள்  ஆட்டுக்கறி என்று சொல்லி பன்றிக்கறி சாப்பிட வைத்துவைத்து விட்டனர். வீடு திரும்பிய போது அவரின் முகம் அத்தனை பரிதாபமாக இருந்தது.
எளிமை மற்றும் நன்னடத்தை தொடர்பாக எனது குடும்பத்தினர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்ததும் எனக்கு தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. பொருட்களை மறுஉபயோகம் செய்வது தொடர்பாக குறிப்பாக பொருட்களைக் கழிப்பது தொடர்பாக அவர்கள் வாழ்க்கை முறைக்குள்ளேயே ஒரு அம்சம் தகவமைக்கப்பட்டிருந்தது. நமது புத்தகங்கள் அல்லது உடைகள் முழுமையாக நம்முடையது என்று நினைப்பதே தவறாக எங்கள் குடும்பத்தில் கருதப்பட்டது. உதாரணத்திற்கு எங்கள் புத்தகங்களுக்கு வீட்டிலேயே அட்டைப்போட்டு விடுவோம். ஒரு ஆண்டு உபயோகத்துக்குப் பிறகு அவை வசதியில்லாத உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். அவர்களின் குழந்தைகள் அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்துவார்கள். இல்லையெனில் அந்தப் புத்தகங்களை வேறு பள்ளிகளுக்குக் கொடுத்துவிடுவோம். பிறந்தநாள் பரிசுகளாக கிடைக்கும் நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்களையும் நாங்கள் சரியாகப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் மீது எங்கள் சுவாரசியம் குறைந்து போனபின் அவை மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவை.

மதம் மற்றும் அதீத ஒழுக்கவியல் பின்னணியில் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள், இல்லையா?

ஆமாம். மிக, மிக ஒழுக்கமான பின்னணியில் வளர்ந்தேன். அத்துடன் அந்த ஒழுக்கச் சட்டகம், எனது இளவயதில் மிகுந்த சுமையாகவும் இருந்தது. நான் சீக்கிரமே எனது மதநம்பிக்கையை இழந்ததற்கும் அது ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். பிரம்மசமாஜம், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் காந்தியிடமிருந்து, தூய்மைவாதத்தின் சாயல் கொண்ட மிகையான அளவு  ஒழுக்கவியலை வங்காள கிறிஸ்தவம் பிரதானமாக உள்வாங்கியது. எனது பெற்றோர்கள் காந்தியின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். சுதந்திரப் போராட்டத்தை அவர் வழிநடத்து பாணியால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தனர். எங்களுக்கு அது ஒருவகை பழமைவாதமாகவும், பாரம்பரிய ஒழுக்கவாதமாகவும் பட்டது. ஒழுக்கப்பண்பு அல்ல அது, ஒழுக்கவாதம். நாங்கள் அதை தொடர்ந்து கேலி செய்தோம். பல ஆண்டுகள் காந்தி தொடர்பாக முழுமையான புறக்கணிப்பு மனிநிலையிலேயே இருந்தேன். மதச்சாயல் கொண்ட எந்த விதமான அறத்தையும் சேர்ந்து புறக்கணிப்பவனாகவே இருந்தேன். எனது வாழ்வில் மிகவும் பிற்பகுதியில் தான், நான் காந்தியை மறுகண்டிபிடிப்பு செய்தேன். சாதாரண மக்களின் அறவியல் வரைமுறைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அறவியல் ஆகியவற்றின் மீது நான் தீவிர கவனம் கொள்ளத் தொடங்கினேன். ஜனநாயக அரசியலின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த சமயம் எனக்கு அது சுமையாகப் படவில்லை. சமூக மற்றும் கலாசாரத் திசைகாட்டுதல் என்பது, மேலதிகமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக நான் எண்ணினேன். சுற்றுச்சூழல் பிரச்னைகள், அமைதி இயக்கம், உலகளாவிய, பிராந்திய வன்முறைகளின் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் பின்னணியில் தான் எளிமையான அன்றாட அறப்பண்பின் விழுமியங்களைப் பாராட்டத் தொடங்கினேன்.

அதுவும் எனது குடும்பத்தினர் என்மீது தாக்கம் செலுத்தியதன் பகுதியாகவே இருந்தது. ஏனெனில் அவர்களது அறப்பண்பு, குறிப்பிட்ட கருணையால் உருவானது. எனது அப்பா எதையாவது வாங்குவதற்காக வெளியே போய்விட்டு, மீண்டும் பணம் எடுப்பதற்கு வீட்டுக்கு வருவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். தெருவில் யாராவது ஒரு ஏழையைப் பார்த்தால் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். நாங்கள் அதிகம் வசதியாக இல்லாத காலத்திலும் அவர் இப்படியே செய்தார். மிச்சமின்றி கொடு என்பது அவருக்குப் பிடித்த பைபிள் வாசகம்.


இந்த அறப்பண்பின் அடிப்படை இன்று உங்களுக்கு எப்படியாக இருக்கிறது. நீங்கள் மதநம்பிக்கையற்றவரும் கூட. உங்கள் அறப்பண்பு மதநம்பிக்கையில் வேர்கொண்டதில்லை இல்லையா?

நான் மத நம்பிக்கையில்லாதவனாக இருக்கலாம். ஆனால் வேறுவகை நம்பிக்கைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒரு அறவியல் கோட்பாட்டுடன் வாழ்கிறார்கள். எனது அறவியல் என்பதின் ஒருபகுதி எனது கலாசார, சமூக மற்றும் மதப்பின்னணியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அத்துடன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் மீது எனக்கு வளர்ந்து கொண்டிருக்கும் மரியாதையும் எனது அறவியலை வடிவமைத்திருக்கிறது. இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு வாழ்க்கையும், அர்த்தப்பூர்வமாக இருக்கும்பட்சத்தில், இயல்கடந்த இருப்பின் மாயத்தொடுகையை கட்டாயம் வைத்திருக்கத்தான் செய்யும். அந்த எல்லை கடக்கும் நிலை ஆன்மீகத்திலிருந்து வரலாம். அல்லது அறத்தின் பால் விருப்பு கொண்ட சில சமூக நடவடிக்கை வடிவங்கள் வழியாக ஒருவருக்கு மறைமுகமாக ஏற்படலாம்.


உங்களது உலகநோக்கு கருத்தியல் சாராத அறிவார்த்தமாக உள்ளது. அத்துடன் தேவையற்ற அரசியல் கோஷங்களும் இல்லை. ஆக்கப்பூர்வமான பயன்விளைவை உருவாக்க உள்ளிருந்து போராடும் தடுப்பு இயக்கத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?

அப்படியான முறையில் நான் யோசிக்கவில்லை. ஆனால் கருத்தியல்கள் தொடர்பாக எனக்கு பலத்த சந்தேகம் உருவானது உண்மை. ஒரு உளவியலாளர் பணியில் கருத்தியலாளர்கள் எல்லாரும் தங்கள் கருத்தியலுக்கு ஆதாரமான பொருட்கள் மீது ஆழ்ந்த வெறுப்பை வைத்துள்ளதைப் பார்க்கிறேன். அவர்களது கருத்தியல் யாரை முன்வைத்துச் செயல்படுகிறதோ, அவர்களுக்கு எதிராகவும், யாருக்குப் பயன்படுமோ அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டதாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு எனது அனுபவத்தில் பல மார்க்சிஸ்டுகள், பாட்டாளிகளை வெறுப்பவர்கள். அவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு ஒரு பாட்டாளி, போதுமான புரட்சிகரமானவனாக, அறிவுகொண்டவனாக அல்லது மனச்சான்று உள்ளவனாகத் தெரியமாட்டான். அவர்கள் போதிய அளவு செயல்தன்மை அற்றவர்களாக, கருத்தியல் உத்வேகம் அற்றவர்களாக, ஒழுங்கில்லாதவர்களாக, தங்களது வரலாற்றுப் பாத்திரத்தையோ, வகுப்பு நலன்களையோ உணராதவர்களாகத் தெரிவார்கள். பெண்ணியவாதிகளுக்கு, பெண்கள் மீது கடுமையான வெறுப்பின் ரேகைகள் தென்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு பெரும்பாலான பெண்கள் போதுமான அளவு பெண்ணிய உணர்வு கொண்டவர்களாகவோ அல்லது பெண்ணியக் கருத்தியலால் முழுமையாக உந்தப்படாதவர்களாகவோ தெரிகின்றனர். சமூகத்தில் அவர்கள் தங்களுக்கான இடத்தை கோரிப்பெறுவதற்கு போதுமான போராட்டக்குணம் இல்லாமல் இருப்பதாக பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். பெரும்பாலான பெண்ணியவாதிகள், குடும்பப்பெண்களை ஏளனம் செய்பவர்கள். மதரீதியானதும், இனரீதியானதுமான வன்முறையை ஆய்வுசெய்யும் போது, இந்து தேசியவாதிகளால் எழுதப்பட்ட பெரும்தொகுதியை நான் படித்திருக்கிறேன். இவர்கள் பேரினவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் சிறந்த வசைகள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தொடர்பானதல்ல. அவர்கள் முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் சந்தேகமேயின்றி திட்டுகிறார்கள் தான். ஆனால் அவர்களது கொடூரமான தாக்குதல்கள் இந்துக்கள் மீதானதாகவே இருக்கின்றன. இந்துக்கள் ஒருங்கிணைப்பில்லாதவர்களாக, கையாலாகதவர்களாக, எரிச்சலூட்டக்கூடியவர்களா, தங்களுக்குள்ளேயே சண்டைகள் போடுபவர்களாகவே அவர்கள் எண்ணுகின்றனர். அவர்களது எழுத்துகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது மறைமுக ஆராதனை இருக்கிறது. நவீன தேசிய அரசைக் கையாளவும், நவீன தேசியத்தை உருவாக்கவும் போதிய திறனையும் தகவமைப்பையும் அவர்களது மதங்கள் வழங்கியிருப்பதான மரியாதை அது. இந்தப் பின்னணியில் இந்துக்கள், குறிப்பாக ஊறுபடும் நிலையில் இருப்பதாக இந்துப் பேரினவாதிகள் கருதுகின்றனர். வி.டி. சாவர்க்காரின் இந்துத்வா தொடங்கி நாதுராம் கோட்சேயின் கடைசி வாக்குமூலம் வரை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போல இந்துக்கள் இல்லை என்று கிட்டத்தட்ட ஒப்பாரியே வைக்கின்றனர்.
தங்கள் கருத்தியல்களின் பயனாளிகள் மீது ஆழமான விருப்பையும் வெறுப்பையும் பராமரிப்பதை ஒரு விதியாகவே கருத்தியல்வாதிகள் வைத்திருப்பதால் நான் அவர்களை சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு உளவியல் அமைப்பாக கருத்தியலைச் சந்தேகப்படுவதை படிப்படியாக உருவாக்கிக் கொண்டேன். ஒரு உளவியல் கட்டமைப்பாக எந்தவிதமான கருத்தியலும், மனித ஆளுமையிடம் குறிப்பட்ட ஒன்றைக் கேட்டு நிற்கிறது. இந்த கோரிக்கைகள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஏற்கப்படாத ஒருவரின் உணர்வுநிலைகளான சுதந்திரமான கோபம், அதிருப்தி உணர்வுகள், காரணமற்ற அவநம்பிக்கை கற்பனைகள் ஆகியவற்றுக்கான கேடயமாகவே கருத்தியல்கள் இருக்கமுடியும் என்பதற்கு திட்டவட்டமான சான்றுகள் உள்ளன. நான் கருத்தியல்களிலிருந்து விலக நேர்ந்ததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கக் கூடும். சமீப ஆண்டுகளில் அவை குறித்து கூடுதலான சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் எனக்கு இந்தளவு நிச்சயம் இல்லை. 20 ஆண்டுகளாக எனது மாணவப்பருவத்திலிருந்து விமர்சனவாதக் கோட்பாட்டின் பொது முறைமைகளுக்குள் ஆய்வு செய்துவருகிறேன். சமூக மற்றும் அரசியல் நுண்ணுனர்வு கொண்ட உளநோய் தீர் உளவியல் எழுத்துமுறையாக அது இருப்பதால் என்னை ஈர்த்திருக்கலாம்.  தியோடர் அடோர்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ், மேக்ஸ் ஹோர்கிமர், ஹன்னா ஆரண்ட் மற்றும் எரிக் ப்ராம் போன்ற ஆய்வாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. நான் முதலில் சொன்ன இரண்டு பேரின் தாக்கம் என்னிடம் வெளிப்படையாகவே 15 முதல் 20 ஆண்டுகள் நீடித்தது. அதை பெரும்பாலான பேர் கண்டுணரவேயில்லை. நான் என்னை ஒரு இடதுசாரியாகவோ, தீவிர நிலைப்பாடு உள்ளவனாகவோ எப்போதும் சொல்லியதில்லை. எப்படியிருப்பினும் பிராங்க்பர்ட் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் மார்க்சியர்களாக கருதப்படுவதில்லை. ஏனெனில் இந்தியாவில் லெனினிஸ்டுகளே அதிகம். ட்ராட்ஸ்கிக்கு ஆங்காங்கே சில ஆதரவாளர்களும் இங்கு உண்டு. அவர்கள் ஸ்டாலினை உதறியவர்களே தவிர லெனினை அல்ல. அவர்கள் தங்கள் பற்றுதலை பல்வேறு சாயல்கள் கொண்ட நிலை உறுதிப்பாட்டுவாத அல்லது அதீத நிலை உறுதிப்பாட்டுவாத மார்க்சியத்துடன் கொண்டிருப்பவர்கள். சுவாரசியத்துக்குரிய வகையில் அப்படியான மார்க்சிய வடிவம் இப்போது பலவீனப்பட்டு விட்டது. உலகின் இப்பகுதியில் உள்ள விமர்சனவாதக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களில் ஒருவர் கூட எனது முறை விமர்னவாதக்கோட்பாட்டை ஒட்டியது என்று அறிந்துகொண்டதேயில்லை. இங்குள்ள அறிவார்த்த கலாசாரம் என்பது எப்படியென்று தெரிந்துகொள்ள இதுவொன்றே போதுமானது. உங்கள் கருத்தியல் அடையாளத்தை மற்றவர்கள் ஏற்பதற்கு அதை நீங்கள் சொந்தம்கொண்டாடி, வெட்டவெளிச்சமாக்க வேண்டும். ஏனெனில் கருத்தியல் என்பது நகர்புற மத்தியதர வர்க்கத்தினருக்கு மதநம்பிக்கைக்கான பதிலியாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

தெற்காசியாவில் கருத்தியல் என்பது மேலோட்டமானதே. ஒருவரது உள்ளார்ந்த வன்முறையை தேர்ந்தெடுத்த இலக்குகளை நோக்கி செலுத்துவதற்காகவே இந்த கருத்தியல் பிரதான தேவையாக உள்ளது. தெற்காசியர்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்ட கருத்தியலாளர்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் கருத்தியல் பிணைப்பு மீது தொடர்ந்த சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் தான் கார்ல் மார்க்சின் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்காத நிறைய மார்க்சியர்களை நீங்கள் இங்கே பார்க்கமுடிகிறது. அவரைப் படிப்பது விஷயமே அல்ல. ஆனால் 'நான் மார்க்சிஸ்ட்' என்று கோரிக்கொள்ளுதல் மிக முக்கியமானது.
(தொடரும்)

Comments