Skip to main content

வண்ணமீன்கள்



வண்ணமீன்களின் குழுத்திரள் தான்
தம் இயல்பென
யுவதிகள்
கைகோர்த்தபடி
குமிழ்விடும் சிரிப்பால்
வீட்டையும் சிறைகளையும்
முற்றுகையிடுகின்றனர்
ஒரு பொழுதில்
மீன்கூட்டத்தின் வெளிவடிவை
வரைந்தால்
ஒரு பெரிய மீன்
கிடைக்கலாம்
சிரிப்பற்று
அடுக்குமாடி குடியிருப்புகளில்
பால்கனிகளில்
குட்டிமகளின்
சிகையில் சிக்கெடுக்கும்போது
ஏக்கமுடன் சலிக்கும்
செடிகளாய் நிற்கின்றனர்
ஒருபொழுதில்
கசப்பில் உலர்ந்து
காய்ந்து நிற்கும்
முதிய வேம்பின் நிழலில்
காத்திருக்கிறார்கள்
அனிச்சையாக
உதிரும் இலைகளின்
கிளிநடனம்
ஞாபகத்தைப் போல்
அவர்களை அலைக்கழிக்கிறது
ஒருபொழுதில்

அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் தொகுப்பிலிருந்து)

Comments