Skip to main content

கதையின் காகம்


ஷங்கர்ராமசுப்ரமணியன்



வெயில் வேகும் நிலத்தில்
பயணியொருவன்
விட்டுச்சென்ற
பானையின்
மிஞ்சிய அடிநீராய்
இருந்தேன்
வெகுநாட்களாக.
நிலமெங்கும் நீர்தேடி
தாகத்துடன்
ஒருநாள்
காகமும் வந்தது..
பானையின அடியில்
தன் அலகால் எட்டமுடியாத
என்னை
அன்பின்
கூழாங்கற்கள் கொண்டு
நிரப்பிப் பருகத் துணிந்தது
காகம்.
என் கடன் தீர்க்க
நானும் ஆரவாரித்துத் ததும்பினேன்..
என் உயிரின் வேகத்திலா
கூழாங்கல்லின் கனத்திலா
காகத்தின்
தாக தாபப் பரபரப்பிலா
தெரியவில்லை
பானை உடைந்தது
நான்
மீண்டும் கல்லாய் காய்ந்தேன்..

Comments